search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடலூர் அரசு ஆஸ்பத்திரி"

    • சிறுமியின் தந்தை கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
    • சளி சிகிச்சைக்கு வந்த சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    கடலூர் :

    கடலூர் அரசு மருத்துவமனைக்கு உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக 13 வயது சிறுமி வந்துள்ளார். சிறுமியை பரிசோதனை செய்த டாக்டரிடம், சளி பிரச்சனை இருப்பதாக தந்தை கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர், அவருக்கு ஊசி போடவும், மாத்திரையும் எழுதி சீட்டு கொடுத்துள்ளார்.

    அந்த சீட்டை வாங்கிக்கொண்டு ஊசி போடும் இடத்திற்கு வந்த தந்தையிடம் இருந்து மருந்து சீட்டை வாங்கிய செவிலியர் அதை படித்து கூட பார்க்காமல் 2 ஊசி போட்டுள்ளார். இதனை பார்த்த சிறுமியின் தந்தை, எதற்காக 2 ஊசி போடுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர், நாய் கடித்தால் 2 ஊசி தான் போட வேண்டும் என்று கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தந்தை, எனது மகளுக்கு சளி பிரச்சனை தான் என்று கூறியுள்ளார். அதற்கு செவிலியர் மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக சிறுமியின் தந்தை கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். இதனை அடுத்து இச்சம்பவம் தொடர்பான செய்தி வெளியானது.

    இந்நிலையில், சளி சிகிச்சைக்கு வந்த சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    அலட்சியமாக ஊசி செலுத்திய செவிலியர் கண்ணகியை பணியிடை நீக்கம் செய்து அரசு மருத்துவமனை இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

    • கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு சளிக்கு ஊசி போடுவதற்கு பதிலாக நாய் கடிக்கான ஊசி போட்ட செவிலியரால் பரபரப்பு ஏற்பட்டது.
    • மகளுக்கு அலட்சியமாக சிகிச்சை அளித்த செவிலியர், பணியில் இருந்த டாக்டர், கண்காணிப்பாளர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் அருகே கோதண்டராமாபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் கருணாகரன். இவர் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    என்னுடைய மூத்த மகள் சாதனாவுக்கு (வயது 13) உடல்நிலை சரியில்லை. அவரை சிகிச்சைக்காக நேற்று முன்தினம் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தேன். அங்கு எனது மகளை பரிசோதனை செய்த டாக்டரிடம், எனது மகளுக்கு சளி பிரச்சனை இருப்பதாக தெரிவித்தேன். இதையடுத்து எனது மகளை பரிசோதனை செய்த டாக்டர், அவருக்கு ஊசி போடவும், மாத்திரையும் எழுதி சீட்டு கொடுத்தார்.

    அந்த சீட்டை பெற்ற நான், மாத்திரை வாங்கிக்கொண்டு ஊசி போடும் இடத்திற்கு வந்தேன். அங்கிருந்த செவிலியர் என்னிடம் சீட்டை வாங்கிக் கூட பார்க்காமல், எனது மகளுக்கு 2 ஊசி போட்டார். அப்போது நான் எதற்காக 2 ஊசி போடுகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், நாய் கடித்தால் 2 ஊசி தான் போட வேண்டும் என்று கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நான், எனது மகளுக்கு சளி பிரச்சினை தான் என்றேன். அதற்கு அவர் மலுப்பலாக பதில் அளித்தார்.

    இதற்கிடையில் எனது மகளுக்கு மயக்கம் ஏற்பட்டது. உடன் அவரை உள்நோயாளிகள் சிகிச்சை பெறும் பிரிவில் சேர்த்து உள்ளேன். ஆகவே எனது மகளுக்கு அலட்சியமாக சிகிச்சை அளித்த செவிலியர், பணியில் இருந்த டாக்டர், கண்காணிப்பாளர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

    • பத்மாவதி மற்றும் அவரது கணவர், குழந்தைகள், உறவினர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.
    • குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்காக கையில் பெட்ரோல் கேனை கொண்டு வந்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே உள்ள சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி பத்மாவதி. கர்ப்பிணியான பத்மாவதிக்கு, கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 19.9.2022 அன்று அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் சிகிச்சை முடிந்ததும் பத்மாவதி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அதன் பிறகு பத்மாவதிக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 3 நாட்களாக எவ்வித சிகிச்சையும் அளிக்காததால், உறவினர்கள் அவரை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் பத்மாவதியை பரிசோதனை செய்ததில் பிரசவத்தின் போது குடல் பகுதியையும், கர்ப்பப்பை பகுதியையும் சேர்த்து தையல் போட்டுள்ளதும், அதனால் தான் வயிறு வலி ஏற்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட பத்மாவதி, சிகிச்சை முடிந்ததும் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல முறை புகார் அளித்தார்.

    அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மருத்துவ குழு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்திய பிறகு, எவ்வித அறிக்கையும் சமர்ப்பிக்கவில்லை என தெரிகிறது. இதனால் பத்மாவதி மற்றும் அவரது குடும்பத்தினர் கலெக்டரிடம் தொடர்ந்து புகார் அளித்தும் பதில் ஏதும் இல்லை. இது தொடர்பாக பத்மாவதியின் உறவினர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியின் முன்பாக ஏற்கனவே போராட்டம் நடத்தியுள்ளனர்.

    இந்நிலையில் இன்று காலை பத்மாவதி மற்றும் அவரது கணவர், குழந்தைகள், உறவினர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்கள் அங்கு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்காக கையில் பெட்ரோல் கேனை கொண்டு வந்தனர். இதனை பார்த்த போலீசார் அவர்களிடமிருந்து பெட்ரோல் கேனை வலுக்கட்டாயமாக பிடுங்கினர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதுவரையில் மூன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதற்கு மேல் எங்களால் அறுவை சிகிச்சை செய்ய முடியாது. எனவே, நாங்கள் அனைவரும் உயிரை மாய்த்துக்கொண்டு எங்களுடைய உடல் உறுப்புகளை தானமாக வழங்குகின்றோம் என்று கூறி ஆஸ்பத்திரி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி பத்மாவதி உறவினர்கள் சமாதானப்படுத்தி வருகின்றனர். தவறான சிகிச்சை செய்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்ட எங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடலூர் அரசு ஆஸ்பத்திரி வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது.

    ×